Tuesday, August 5, 2008

கடவுள் உண்டா இல்லையா?

எல்லோரையும் போலவே எனக்கும் இந்த ஐயம் எனது பால்ய வயதில் எழுந்தது. என்னை சிந்திக்க தூண்டிய முதல் கேள்வி இது. எனவே தான் இந்த தலைப்பை எனது முதல் தலைப்பாக கொண்டுள்ளேன். அதற்கு முன்பு வரை நான் எல்லோருக்கும் ஆமாம் சாமி தான். பத்தாம் வகுப்பு படிக்கும் வரை நான் வெள்ளி செவ்வாய் கோயிலுக்கு செல்லாவிட்டாலும், வீட்டில் அம்மா சார்பில் விளக்கேற்றி சாமி கும்பிடும் ஒழுக்கமான பையன். மதுரை தத்தநேரியில் வைகை கரையோரம் அமைந்துள்ளது எங்கள் வீடு. நான் வளரும்போது இந்து மதத்தை சார்ந்தவன் என்றும் எனது ஜாதி பள்ளன் என்றும் வளர்க்கப்பட்டேன். மார்கழி மாதம் எங்கள் தெரு சிறுவர்கள் எல்லோரும் காலையில் எழுந்து அருகில் உள்ள கோயிலுக்கு செல்வது வழக்கம். அங்குள்ள அனுமார் கோயிலின் பூசாரி முறை திடீரென்று பதறினார். ஓடி சென்று ஒரு குடத்தில் தயாராக இருந்த தண்ணீரை தனது மேல் ஊற்றி கொண்டார்.
பக்கத்தில் இருந்த முதியவர் ஒருவர் என்னை திட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் இருந்த நண்பன், உன் கை அவர் மேல் பட்டு விட்டது, அதனால் தான் அவர் குளிக்கிறார் என்றான். ஏன் என்று அவனிடம் கேட்டேன். தெரியாது என்றான். எனது பெற்றோரிடமும் அண்ணனிடமும் நடந்த விடயத்தை சொன்னேன். எங்க அண்ணன் சாமி கும்பிட மாட்டான். எனவே அவன் எங்களுக்கு கெட்டவனாகவே பட்டான். பிறகு நாம் தாழ்ந்த சாதி அவர்கள் உயர்ந்த சாதி (அல்ல, இது உயர்ந்த சதி) என்று விளக்கம் கொடுத்தார்கள். எனக்கு கோவம் வரவில்லை. மறுநாள் முதல் நாங்கள் வேண்டுமேன்றே பூசாரியை தொட ஆரம்பித்தோம். அவர் ஓட்டத்தையும் குளிப்பதும் எங்களுக்கு தினசரி வேடிக்கையாக பட்டது. அந்த பூசாரி கோனார் சாதி பெரியோரிடம் முறையிட்டு அவர் எங்களை அதட்டினார். நாங்கள் விடுவதாயில்லை.

காலையில் எழுந்து தினசரி படிப்பது எனக்கு வழக்கம். படிக்கும் பழக்கத்தை உருவாகியது அரசியல் கட்சி மன்றங்களே. காங்கிரஸ் மன்றத்தில் தினமலர் பேப்பருடன் வரும் சிறுவர் மலர், தினமணியுடன் வரும் தினமணிகதிரின் தும்பி கதை, தினகரனில் சினிமா படங்கள் கம்யுனிஸ்ட் மன்றத்தில் சீனா எனும் அங்கில புத்தகத்தில் வெள்ளைக்கார கறிகளின் படங்கள். வெள்ளிமலருக்கு கடும் போட்டியே நடக்கும். இந்த பேப்பரில் படம் பார்க்கும் வழக்கமே நாளடைவில் வாசிக்கும் பழக்கத்தை தூண்டியது. இதற்க்காக அதிமுக தவிர அணைத்து கட்சி மன்றங்களுக்கும் எனது நன்றிகள். ஏனெனில் அதிமுக மன்றத்தில் பேப்பர் ஒழுங்காக வருவதில்லை. யாரும் பொறுப்பேற்கவும் இல்லை.

தொடர்வேன்.....

No comments: